தினகரன் 25.10.2010
திருவொற்றியூரில் அடுத்த மாதம் திறப்பு ரூ1 கோடியில் காஸ் தகன மேடை
திருவொற்றியூர், அக். 25: திருவொற்றியூரில் ரூ1 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன காஸ் தகன மேடை அடுத்த மாதம் திறக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் தெரிவித்தார்.
திருவொற்றியூர் நகராட்சி சார்பில் பட்டினத்தார் கோயில்தெரு அருகில் மயானம் உள்ளது. மயானத்துக்கு செல்லும் வழியில் முட்புதர்கள் இருந்ததால் சடலத்தை எடுத்துச்செல்லவும், புதைக்கவும், எரிக்கவும் மக்கள் சிரமப்பட்டனர்.
இதனால், மயானத்தை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, ரூ1 கோடியே 5 லட்சம் செலவில் பூங்காவுடன் கூடிய நவீன எரியூட்டு மயானம் (காஸ் தகன மேடை) அமைக்க திருவொற்றியூர் நகராட்சி முடிவு செய்தது. இதன் கட்டுமான பணியை மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தொடங்கி வைத்தார்.
சுற்றுப்புற சுவருடன் அழகான பூங்கா, மின்விளக்குகள், அமரர் ஊர்தி, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் என அனைத்து வசதிகளுடன் இந்த மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் கூறுகையில், ‘நவீன எரியூட்டு மயான பணிகள் திட்டமிட்டபடி முடிந்துள்ளது. அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். அடுத்த கட்டமாக கிறிஸ்துவர்களுக்கான மயான இடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.