தினமணி 22.08.2009
வாடகைப் பாக்கி: 8 கடைகளுக்கு நகராட்சி பூட்டு
விருதுநகர், ஆக. 21: விருதுநகரில் வாடகைப் பாக்கிக்காக 8 கடைகளை நகராட்சி பூட்டி சீல் வைத்தது.
விருதுநகர் நகராட்சிக்கு வாடகைப் பாக்கி உள்ளிட்டவைகளை ஆக.14-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையர் கல்யாணசுந்தரம் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
வாடகைப் பாக்கியை செலுத்தாதோர் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 8 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கடைகள் ஏலம் விடப்பட உள்ளன.
குடிநீர் கட்டணப் பாக்கிக்காக ஏழு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நகரில் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கை தொடரும் என நகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் தொழில் வரி நிலுவை வைத்துள்ள தனியார் நிறுவனம் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி நிலுவை வைத்திருப்பவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யவும் நகராட்சி முடிவு செய்துள்ளது.