தினகரன் 28.10.2010
நெகமத்துக்கு 15லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் துணை முதல்வரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை
கிணத்துக்கடவு,அக்.28:நெகமத்துக்கு தினம் 15 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டுமென துணை முதல்வரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெகமம் பேரூராட்சி தலைவர் சபரி கார்த்திகேயன் சென்னையில் துணை முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு மனு கொடுத்துள்ளார், அதில் அவர் கூறி இருப்பதாவது
கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சியில் 1989ல் தி.மு.க.அரசின் போது வடிவமைக்கப் பட்டு 1996ல் செயல்படுத்திய சூளேஸ்வரன்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது குடிநீர் கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. பேரூராட்சி பகுதியில் சுழற்சி முறையில் இத்தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சுழற்சி முடிய 20 நாட்கள் ஆகிறது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதை போக்க ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் தரப்படுகிறது. தற்போது பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. அதனால் குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது.
மாவட்ட கலெக்டர் சிறப்பு நிதியின் மூலம் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டன.சூளேஸ்வரன் பட்டி குடிநீர் திட்டத்தில் இருந்து மிக்தடை, குடிநீர் குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் ஏற்கனவே 2லட்சத்து 60ஆயிரம் லிட்டர் குடிநீர்தான் கிடைக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தர முடிவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
சூளேஸ்வரன்பட்டிக்கு இத்திட்டத்தின் மூலம் தினம் 15 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. அந்த பேரூராட்சிக்கு தற்போது புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்திட்டம் முடிந்த பிறகு ஏற்கனவே பெற்று வரும் 15 லட்சம் லிட்டர் குடிநீரை பெரிய நெகமம் பேரூராட்சியில் நிலவும் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கூறி இருக்கிறார்.