தினமணி 28.10.2010
கட்சி விளம்பரத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை
திருப்பூர், அக். 27: கட்சிகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு இல்லை என்று, திருப்பூரிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
கட்சி விளம்பரத் தட்டிகள், பேனர்கள் வைப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கி ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட திருப்பூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது தொட ர்பான பிரச்னையில், மாநகராட்சி நிர்வாகம் தலையிடுவது குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் எம்.ரவி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் வடக்கு நகரச் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சையான இதர ஜனநாயக, பொதுநல அமைப்புகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவது, அரசியல் கட்சிகள் கூட்டம் கூட்டும் உரிமை, விளம்பரம் செய்யும் உரிமையைப் பறிக்கும் செயலாகும். அதற்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை. இப்படியான தீர்மானத்தை முன்மொழிவது தவறான முன்னுதாரணம். இந்த முடிவு தொடர்பான அறிக்கையை மாநகராட்சிக்கு அனுப்பவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் தெற்கு மாநகரச் செயலர் எம்.ராஜகோபால், எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக), பரமேஸ்வரி (மதிமுக), சுந்தரராஜன் (காங்கிரஸ்), முஸ்தபா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.