தினகரன் 29.10.2010
நகரின் முக்கிய இடங்களில் விளம்பர பேனர் வைக்க தடை ஆர்.டி.ஓ. அதிரடி உத்தரவு
பொள்ளாச்சி, அக் 29: பொள்ளாச்சி நகரில் பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் முன்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து ஆர்.டி.ஓ. அழகிரிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொள்ளாச்சி நகரின் பல்வேறு இடங்களிலும் விளம்பர பேனர்கள் மாதக்கணக்கில் வைக்கப்படுவதால் போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவஸ்தைக்கு ஆளாகி வருகின்றனர். இரு பஸ் நி¬லையங்கள், பாலக்காடு ரோடு, நகராட்சி அலுவலகம், காந்தி சிலை, நியூ ஸ்கீம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, தேர்நிலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவே இருந்து வருகின்றன. பல இடங்களில் முறையான அனுமதி எதுவும் பெறாமல் மாதக்கணக்கில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மெத்தனமாகவே இருந்து வந்தனர். இதனையடுத்து, ஆர்.டி.ஓ. அழகிரிசாமி தலைமையில் ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள விளம்பர பேனர்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. வர்த்தக நோக்கிலான பேனர் களை நகராட்சி நிர்வாகமும், அரசியல் கட்சியினரின் பேனர்களை போலீ சாரும் அகற்றுவதாக கூறி னர்.
ஆனால், விளம்பர பேனர்களை அகற்றும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் விளம்பர பேனர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கின. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ஆர்.டி.ஓ. அழகிரிசாமி தலைமையில் ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டது. இதில் நகராட்சி சார்பில் நகரமைப்பு அலுவலர் வரதராஜ், தி.மு.க. சார்பில் கவுன்சிலர் கண்ணன், அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நகரின் முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து ஆர்.டி.ஓ. அழகிரிசாமி கூறியதாவது:
நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விளம்பர பேனர்களால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பொது மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். ஆகவே இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசியல் கட்சியினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி பல்வேறு முடிவு எடுக்கப்பட்டுள்ளன.
நகரின் எந்த ஒரு இடத்திலும் விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் நகராட்சி மற்றும் போலீசாரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விளம்பர பேனர்கள் வைக்க நகராட்சியும், போலீசாரும் அனுமதி வழங்க வேண்டும். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களைசுற்றிலும், அரசு அலுவலகங்கள் அருகிலும் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது. காந்தி சிலை பகுதியில் சிக்னல்களை மறைக்கும் விதத்தில் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் அரசு விதிகளின்படி நிகழ்ச்சிக்கு மூன்று நாள் முன்பும், நிகழ்ச்சி முடிந்து மூன்று நாட்களுக்கும் மட்டுமே விளம்பர பேனர்கள் வைக்கப்பட வேண்டும். நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து வாரத்திற்கு ஒரு நாள் நகர் முழுக்க ரோந்து பணி மேற்கொண்டு விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும். இவ்வாறு ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.