தினமணி 29.10.2010
மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம்
மானாமதுரை, அக். 28: மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ராஜாமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் நரசிங்கம் பேசுகையில், வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்வதில் தனது வார்டு புறக்ககணிக்கப்படுவதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தலைவர் ராஜாமணி, உங்கள் வார்டில் நீங்கள் தெரிவிக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அவசியம் செய்து தரப்படும் என்றார்.
17-வது வார்டு அதிமுக கவுன்சிலர் வி.என்.சந்திரசேகர் பேசும்போது, வாரச் சந்தை நடைபெறும் நாளில் ஆற்றுக்குள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் மீன்கடைகள் வைக்கப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் இந்த பாதையில் மூக்கை மூடிக்கொண்டு நடந்து செல்கின்றனர். எனவே மீன் கடைகளை வேறு இடத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். ஆற்றுக்குள் வேறு இடத்தில் மீன் கடைகள் வைக்க ஏற்பாடு செய்வதாக தலைவர் தெரிவித்தார். மேலும் நகரில் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து கொசு மருந்து அடிக்கப்படும் எனவும் அவர் கூறினார். பின்னர் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.