தினமலர் 02.11.2010
பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி சார்பில், உள்ளாட்சி தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கும், மக்களிடையே தொடர்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் நேற்று உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் நகராட்சியில் நடந்த உள்ளாட்சி தினவிழாவுக்கு கலெக்டர் (பொறுப்பு) பழனிசாமி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ராஜா, துணை தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். விழாவில், எம்.எல்.ஏ., ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமாதான புறாக்களை பறக்க விட்டு, துப்புறவு பணியாளருக்கு இலவச சீருடைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை எம்.எல்.ஏ., ராஜ்குமார் திறந்து வைத்தார். பின்னர் உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு நடந்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் (பொறுப்பு) பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்து, தெப்பக்குளம் கரையில் மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், டவுன் டி.எஸ். பி., காஜாமொய்தீன், ஆர்.டி.ஓ., பாலுசாமி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உட்பட பலர் பங்கேற்றனர்.