தினமணி 02.11.2010
பழனி நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா
பழனி, நவ. 1: பழனி நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சிகள் தின விழா நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பழனி நகராட்சி சார்பில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
காலை நகராட்சி சார்பில், 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்ற மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி பஸ் நிலையம் துவங்கி, பாளையம், தேவர் சிலை, அடிவாரம் என பல இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சாலையோர குப்பைகள், மணல் அகற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை, பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் மூர்த்தி, பொறியாளர் முத்து உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
இதையடுத்து, இடும்பன் இட்டேரி சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நகராட்சி பணியாளர்களுடன், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் திருமலைசாமி, ஆசிரியர் ரெங்கநாதன் தலைமையில் ஏராளமான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு, நகராட்சி வளாகத்தில் மாணவ, மாணவியர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கங்களும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளும் நடைபெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், சான்றுகளும் வழங்கப்பட்டன.
இதில், கவுன்சிலர்கள் மகேஸ்வரி சக்திவேல், குமார், கார்த்திகேயன், கந்தசாமி, முருகபாண்டியன், பச்சைமுத்து, துப்புரவு ஆய்வாளர்கள் அபுதாகீர், மணிகண்டன், நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.