தினமணி 02.11.2010
பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
பெரம்பலூர், நவ. 1: பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகராட்சியின் தலைவர் எம்.என். ராஜா தலைமை வகித்தார். ஆணையர் கோ.வி. சுரேந்திரஷா, துணைத் தலைவர் கி.முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம. ராஜ்குமார் திறந்தும், நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள குளத்து கரையில் மரக்கன்றுகளை நட்ட பிறகு, நகராட்சிப் பணியாளர்களுக்கு சீறுடைகளை வழங்கினார்.
உள்ளாட்சி தினத்தையொட்டி, நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சு. பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, பாலக்கரை வழியாகச் சென்ற பேரணி, மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில், ரோவர் நர்சிங் கல்லூரி மற்றும் தனலட்சுமி நர்சிங் கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியர் சா. பாலுசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜே. காஜாமொய்தீன், ஆய்வாளர் தே. சிவசுப்பிரமணியன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆர். ராஜாமணி, நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.சிவக்குமார், எம். ரஹமத்துல்லா, பி. கண்ணகி, பி. அன்புதுரை, எம். ரமேஷ்பாண்டியன், ஆர். ஈஸ்வரி, கே. புவனேஸ்வரி, என். ஜெயக்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.