Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி, பேரூராட்சிகளில் ரூ. 210 கோடியில் திட்டங்கள்

Print PDF

தினமணி                 02.11.2010

நகராட்சி, பேரூராட்சிகளில் ரூ. 210 கோடியில் திட்டங்கள்

உதகை, நவ. 1: தமிழகத்திலுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடப்பாண்டில் ரூ. 210 கோடி செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

உதகை நகராட்சியின் சார்பில் உள்ளாட்சிகள் தின விழா அண்ணா கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

உலகில் அனைத்துப் பகுதிகளிலுமே முடியாட்சி முறை இருந்த நிலையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் உள்ளாட்சி முறை இருந்துள்ளது. சோழர் காலக் கல்வெட்டுகளின் மூலம் இதை அறிய முடிகிறது. கிராம ஊராட்சிகள் என இருந்ததாகவும் அவற்றின் தலைவர்கள் குடவோலை முறையில் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இவற்றிலும் பெண்கள், படிப்பறிவில்லாதவர்கள், நிலமற்றவர்கள் போன்றோர் வாக்களிக்க முடியாத நிலை இருந்துள்ளது. ஆனால், தற்போதைய உள்ளாட்சி முறை பல்வேறு நிலைகளிலும் முன்னேறி விட்டது.

தமிழக முதல்வரையோ அல்லது துணை முதல்வரையோ தற்போதுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் யார் வேண்டுமானாலும் நேரில் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கூறும் வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு காலத்தில் அமைச்சர்கள் கூட முதல்வரை சந்திக்க முடியாத நிலையில்தான் ஆட்சி நடைபெற்றுள்ளது.

பெண்களின் சுய முன்னேற்றத்திற்காகவே மகளிர் சுய உதவிக்குழுக்களை கருணாநிதி தொடங்கினார். தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன.

கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திóமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை இந்தியா முழுவதுமே விமர்சித்தது. இவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமா என விவாதித்தனர். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் அந்தத் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றோடு, சொல்லாத பலவற்றையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்ட சொல்லாத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியதற்கு இந்த ஆட்சிக்கு பெண்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ராசா குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் 4-வது இடத்திலிருந்த தமிழகம் நடப்பாண்டில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு உள்ளாட்சிó அமைப்புகளின் பிரதிநிதிகளே காரணம்.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது அதிகாரம் என்ன என்பதைக்கூட தெரியாமல் உள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் குறிப்பிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கோபாலன், சவுந்திரபாண்டியன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா பா.மு.முபாரக், உதகை நகர்மன்றத் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ஜே.ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கே..முஸ்தபா, வின்சென்ட், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோமதி, மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக உதகை நகராட்சிப் பொறியாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.