தினமணி 02.11.2010
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா
தூத்துக்குடி, நவ. 1: தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி பழைய அலுவலகம், ராஜாஜி பூங்கா உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி கட்டடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை மாலை பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மேயர் இரா. கஸ்தூரி தங்கம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநகராட்சி புதிய அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் இரா. கஸ்தூரி தங்கம் பரிசுகளை வழங்கினார்.
இதேபோல், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், துணை மேயர் ஜே. தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபால் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.