தினமணி 25.08.2009
முதல்வர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை ஆக. 28 மேலூரில் வழங்கல்
மதுரை, ஆக. 24: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஆக. 28-ம் தேதி மேலூரில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக ஆட்சியர் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், "இத்திட்டம் குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். மேலும், இத் திட்டத்தின்கீழ் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளை புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மேலூர் வட்டத்தில் ஆக.28 முதல் செப். 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் அடையாள அட்டைகள் வழங்கும் பணி விரைவில் விரிவுபடுத்தப்படும்' என்றார்.
கூட்டத்தில், மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை மேயர் மன்னன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வே.பிச்சை, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பழனிச்சாமி, அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் எஸ்.எம். சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.