தினமணி 04.11.2010
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு
திருவள்ளூர், நவ. 3: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 5, 6, 25 ஆகிய வார்டுகளில் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவர்கள் 292 பேர் கணக்கெடுப்பு செய்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஈச்சந்தோப்பு, ஈக்காடு ரோடு, தகினிகோட்டை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 81 பேர், 6-வது வார்டில் அகரத் தெரு, ஆசூரித் தெரு, வடக்கு ராஜவீதி ஆகிய தெருக்களில் உள்ள 59 பேர், 25-ம் வார்டில் உள்ள சித்தி விநாயகர் கோயில் தெரு, எஸ்கேபி நகர், தாதுகான்பேட்டை, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 152 பேர் உள்பட 292 பேர் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவர்கள் என கணக்கெடுப்பு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பத்தியால்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் நடக்கவே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் சிமென்ட் சாலைகள் அமைக்கவும், நகராட்சி அலுவலக சுற்றுச் சுவரில் அழகிய ஓவியங்கள் வரைய ரூ. 70 ஆயிரம் நிதி ஒதுக்கி தீர்மானமும், பஜார் வீதி, வடக்கு குளக்கரை வீதி மற்றும் சிவன் கோயில் அருகிலும் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க ரூ. 2.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி பொறியாளர் சாய்ராம் நன்றி கூறினார்.