தினகரன் 10.09.2010
அரசு மீது மாநகராட்சி குற்றச்சாட்டு நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் முடக்கம்
புதுடெல்லி, நவ. 10: மாநகராட்சிக்கு அரசு நிதி ஒது க்காததால், நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன என்று மாநகராட்சி பணிகள் குழு தலைவர் ஜகதீஷ் மம்கெயின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாநகராட்சிக்கு தேவையான நிதி ஒதுக்குவதில் மாநில அரசு மெத்தனமாக உள்ளது. அரசின் இந்தப் போக்கால் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. பல்வேறு சமுதாயக் கூடங்கள், பள்ளி கட்டிடங்கள், சாலைப் பணிகள் என பல பணிகள் முடங்கியுள்ளன.
வளர்ச்சிப் பணிகளுக்காக மாநில அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், இதுவரையில் மாநில அரசிடம் இருந்து ரூ.500 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கவே இந்த பணம் போதவில்லை. அடுத்ததாக பணிகளை மேற்கொள்ள புதிதாக நிதி வந்தால் மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், மாநில அரசு இதை கண்டுக்கொள்ளாமல் உள்ளது.
மாநகராட்சிக்கு நிதி ஒதுக்குவதில், மாநில அரசு தேவையில்லாமல் தாமதம் செய்கிறது. மேலும், நிதியாண்டு இறுதியில் நிதியை ஒதுக்குவதை மாநில அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த சமயத்தில் எந்த பணிகளையும் எடுத்து செய்ய முடியாத நிலையில் மாநகராட்சி இருக்கும்.
பணிகள் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர்களும் பணிகள் முடங்கிப் போயுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களிடம் மாநில அரசு நிதி ஒதுக்காததாலேயே பணிகள் முடங்கியுள்ளதை விளக்கி, அரசிடம் கூறி மாநகராட்சிக்கு நிதி ஒதுக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஜகதீஷ் மம்கெயின் கூறினார்.