தினமணி 10.11.2010
நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் சாதனை விளக்க சிறப்பு படக்காட்சி
திண்டுக்கல், நவ. 9: அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனம் மூலம் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனம் மூலம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர் நடவடிக்கையாக நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொது மக்கள் பார்க்கும் வகையில் சிறப்பு படக் காட்சியாக அரசின் சாதனைகள், தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா, திரைப்பட நலவாரியம் சார்பில் தாயுமானவர் போன்ற படங்கள் வெளியிடப்பட உள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி காளனம்பட்டி, காளனம்பட்டி புதூர், 11 ஆம் தேதி சத்திரப்பட்டி, கருங்கல்பட்டி, 12 ஆம் தேதி மேல்கரைபுதூர், ஆவாரம்பட்டி, நவம்பர் 15 ஆம் தேதி சுக்காம்பட்டி, கொண்டசமுத்திரபட்டி, 16 ஆம் தேதி ரெட்டியபட்டி, சேடபட்டி ஆகிய கிராமங்களிலும், நவம்பர்18 ஆம் தேதி முதல் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அய்யம்பாளையம், தாயார்புரம், 19 ஆம் தேதி பூசாரிக்கவுண்டனூர், சித்தையகவுண்டனூர், 20 ஆம் தேதி உண்டார்பட்டி, பள்ளபட்டி, 21 ஆம் தேதி பெரியமல்லனம்பட்டி, சின்னமல்லனம்பட்டி, 22 ஆம் தேதி காமாட்சிபுரம், 23 ஆம் தேதி பிறகரை, இன்னாசிபுரம், 24 ஆம் தேதி மைக்கேல்பாளையம், மூக்கையகவுண்டனூர், 25 ஆம் தேதி நாகம்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, 26 ஆம் தேதி மாரம்பாடி, சின்னமுத்தனம்பட்டி, 29 ஆம் தேதி மல்வார்பட்டி, சவேரியார்பட்டி, நவ. 30 ஆம் தேதி ஸ்ரீராமபுரம், மண்டபம்புதூர் ஆகிய இடங்களிலும் சிறப்பு படக்காட்சிகள் காண்பிக்கப்பட உள்ளன. பொது மக்கள் இந்தப் படக்காட்சியைப் பார்த்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் கேட்டுக் கொண்டுள்ளார்.