தினமணி 10.11.2010
விளம்பர பேனர் அகற்றும் நடவடிக்கை: சிறப்பு சட்டம் இப்போது இல்லை
சென்னை, நவ. 9: விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாக அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத்தில்தான் சிறப்பு சட்டம் இயற்ற முடியும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் உள்ளிட்ட விளம்பர பேனர்களை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாக நவம்பரில் நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதிகள் டி. முருகேசன், வினோத் கே சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் கூறியது:
விளம்பர பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த குறுகிய கால சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஏற்கெனவே தெரிவித்தபடி சிறப்பு சட்டத்தை இயற்ற முடியவில்லை. அந்தச் சட்டம் அடுத்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட உள்ளது என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் விளம்பர பேனர்களை அகற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறினர். வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.