மாலை மலர் 10.11.2010
ஈ.வெ.ரா.சாலை ராஜா முத்தையா சந்திப்பு முதல் அமைந்தகரை வரை 9 சிக்னல்களை கடந்து செல்லும் பிரமாண்ட மேம்பாலம்; ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது
சென்னை, நவ. 10- சென்னை நகரில் மேலும் 4 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தர விட்டுள்ளது. இதற்காக சாலை மேம்பாட்டுக் கழகத்தின் பொறுப்பில் உள்ள சுழற்சி நிதியை ஒரு சதவீதம் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி, பெரியார் ஈ.வெ.ரா.சாலையில் (பூந்தமல்லி நெடுஞ்சாலை) ராஜா முத்தையா சாலை சந்திப்பில் இருந்து அமைந்தகரை புல்லா அவென்யூ சந்திப்பு வரை பிரமாண்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 9 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்லும் வகையில் இது அமையும்.
பிரமாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த மேம்பாலத்துக்கு ரூ.300 கோடி செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன முறையில் இது அமைக்கப்படும்.
கொளத்தூர் அருகில் இரட்டை ஏரி பகுதியில் பெரம்பூர், செங்குன்றம் சாலை சந்திப்பில் ரூ.50 கோடி செலவில் மேம்பாலம் அமைத்தல், ஜி.எஸ்.டி. சாலை யில் பல்லாவரத்தில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டுவது. இதன் மதிப்பீடு ரூ.65 கோடி.
இதுபோல் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புற வழிச்சாலைகள் இணையும் இடத்தில் ரூ.50 கோடியில் மேம்பாலம் அமைப்பது. ஆகியவற்றுக்கான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த 4 பாலங்களின் மொத்த செலவு ரூ.465 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.