தினகரன் 15.11.2010
பெங்களூரில் 3 லட்சம் நாய்களுக்கு குடும்பகட்டுப்பாட்டு சிகிச்சை
பெங்களூர், நவ. 15: பெங்களூரில் கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் தெருநாய்களுக்குகுடும்பகட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் சித்தையா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகரில் பெருகி வரும் தெருநாய்களின் இன பெருக்கத்தை தடுக்கும் நோக்கத்தில் இதற்கு முன் 15 பேக்கேஜ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதை தற்போது 20 ஆக உயர்த்தியுள்ளோம். மாநகரில் உள்ள 198 வார்டுகளிலும் ஏ.பி.சி. (அனிமல் பர்த் கண்ட்ரோல்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏ.பி.சி. திட்டம் செயல்படுத்துவதற்காக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 2, மகாராஷ்டிராவை சேர்ந்த 2 மற்றும் கர்நாடகாவில் இயங்கி வரும் 3 என்ற வகையில் பிராணிகள் நல சங் கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இயங்கி வரும் அனிமல் பிராணிகள் நலம் மற்றும் ஊரக மேம்பாடு என்ற பிராணிகள் நல அமைப்பு தென் மாநிலங்களில் தெருநாய்கள் இன பெருக்கம் செய்வதை தடுக்கும் ஏ.பி.சி. அறுவை சிகிச்சை செய்வதை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. டெண்டர் மூலம் இந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்களுக்கு ஏ.பி.சி. செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடமாடும் அறுவை சிகிச்சை வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஏ.பி.சி. செய்யும் நாய்களுக்கு மனநலம் பாதிக்காமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் ரேபிஷ்நோய் தாக்கிய நெருநாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் தெருநாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்துவதுடன், வெறிநாய்கள் தொல்லையும் குறையும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் சித்தையா கூறினார்.