தினகரன் 12.11.2010
ஓட்டேரி சமூக நலக்கூடத்தில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ தயாநிதி மாறன் நாளை தொடக்கம்
சென்னை, நவ.12: மக்களைத் தேடி மாநகராட்சி நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, அங்கேயே தீர்வு காணப்படுகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி விதித்தல், திட்ட அனுமதி மற்றும் கட்டிட உரிமம், புதிய குடிநீர் இணைப்பு, பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு, எரியாத தெருவிளக்குகளை சரிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி, மண்டலம்&7ல் நாளை (13ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை ஓட்டேரி, வெங்கடாத்திரி தெரு, மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடக்கவுள்ளது. செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலையில், மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்து பேசுகிறார்.
மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள், குடிசை மாற்று வாரியம், பொது வினியோகத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று உடனுக்குடன் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்து தீர்வு காண்பார்கள். இதில் 97வது வார்டு முதல் 106வது வார்டு வரை உள்ள மக்கள்பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.