தினமணி 20.11.2010
இடம் கொடுத்தவருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் பாராட்டு
திருவள்ளூர், நவ. 19: திருவள்ளூர் நகராட்சிக்கு 3857 சதுர அடி இடம் தானமாக கொடுத்தவரை நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையர் மற்றும் கவுன்சிலர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.÷
திருவள்ளூர் நகர்மன்ற அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நகர்மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ÷இதில், நகராட்சி 2-வது வார்டுக்கு உள்பட்ட 35 பயனாளிகளுக்கு கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், பாதாள சாக்கடைப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் 99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து 2, 3, 7, 13, 17 மற்றும் 18 ஆகிய வார்டுகளில் சிமென்ட் சாலை மற்றும் தார்ச்சாலைகள் அமைத்தல், நகராட்சிக்கு உள்பட்ட 7-வது வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு 10 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்ட பணி உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.÷
நகராட்சி அலுவலக கட்டடத்துக்கு எதிர்புறம் வி.எம்.நகர் செல்லும் பிரதான சாலையில் உள்ள நிலம் தொடர்பான வழக்கில் நில உரிமையாளரான செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் முருகேசன் என்பவரின் பக்கம் சாதகமான தீர்ப்பு வெளியானதை அடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.இந்நிலையில் நில உரிமையாளர் முருகேசன் பிரச்னைக்குரிய இடத்தில்
133 அடி நீளம், 29 அடி அகலம் கொண்ட இடத்தை நகராட்சி நிர்வாகத்துக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.இதையொட்டி திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில் முருகேசனுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.