தினகரன் 22.11.2010
70 பேரை பலிவாங்கிய கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் முடிந்தன
புதுடெல்லி,நவ. 22: 70 பேரை பலிவாங்கிய கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி முடிவடைந்தது. லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க்கில் 5 மாடி கட்டிடம் கடந்த திங்களன்று இரவு 8 மணிக்கு இடிந்து விழுந்தது. மொத்த கட்டிடமுமே ஒருசில நொடிகளில் நொறுங்கி தரைமட்டமானது.
கட்டிடம் இடிந்து விழுந்ததுமே பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்புத் துறையினர், போலீஸ், மாநகராட்சி என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தோண்டத் தோண்ட சடலங்கள் வந்து கொண்டேயிருந்தன. மொத்தம் 70 பேர் பலியானார்கள்.
இந்தக் கட்டிடத்தில் 2 மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது அம்பலத்துக்கு வந்தது. அனுமதியின்றி கட்டிய தளங்களுக்காக மாதம்தோறும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருக்கு கட்டிட உரிமையாளர் அம்ரித்பால் சிங் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது. கட்டிட உரிமையாளர் அம்ரித் சிங் பால் கைது செய்யப்பட்டார்.
கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றுவதில் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். 100 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக நடந்த இடிபாடு அகற்றும் பணி நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது. எல்லா இடிபாடுகளும் அகற்றப்பட்டுவிட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
கடைசியாக 48 மணிநேரத்தில் இடிபாடுகளை அகற்றியபோது ஒரு உடல்கூட கண்டெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். கட்டிடம் இடிந்ததில் படுகாயமடைந்த 81 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு சிலரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தை தொடர் ந்து சட்ட விரோதமாக விதி முறைகளை மீறி கட்டப் பட்ட கட்டிடங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க அரசு முடிவு எடுத்துள்ளது.