தினமணி 22.11.2010
பேரூராட்சி அலுவலகம் திறப்பு
கும்பகோணம், நவ. 21: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் பேரூராட்சியில் அனைத்துப் பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 50.92 லட்சத்தில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம், வணிக வளாகம், சமுதாயக் கூடம் ஆகியவற்றை கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து, திருப்பனந்தாள் பேரூராட்சியில் 2,858 பேர், வீராக்கண் ஊராட்சியில் 1,324 பேர் என மொத்தம் 4,182 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடக்கிவைத்தார். மேலும், 19 பேருக்கு முதியோர் உதவித் தொகையாக தலா ரூ. 400 வீதம் அமைச்சர் கோ.சி. மணி வழங்கினார்.
கோட்டாட்சியர் அசோக்குமார், திருவிடைமருதூர் ஒன்றியக் குழுத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.