தினகரன் 26.11.2010
உள்ளாட்சி அமைப்புகளில் மாதந்தோறும் குறைதீர் கூட்டம் பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆவடி, நவ. 26: சென்னை புறநகரில் அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல், வளசரவாக்கம், மாதவரம், திருவொற்றியூர், கத்திவாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மணலி, பம்மல், அனகாபுத்தூர், உள்ளகரம்&புழுதிவாக்கம் உள்ளிட்ட நகராட்சிகள் உள்ளன.
இப்பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இருந்தாலும், குடிநீர், சாலை, தெரு விளக்கு, குப்பை அகற்றுதல், மழைநீர் அகற்றுதல், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பிரச்னைகளை தினசரி மக்கள் சந்திக்கிறார்கள். இவர்கள் குறைகள் குறித்து, பகுதி கவுன்சிலர்களிடம் தெரிவிக்கின்றனர். சில கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் பேசி குறைகளை நிவர்த்தி செய்கிறார்கள். ஆனால், பல கவுன்சிலர்கள் மக்கள் பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதனால், அடிப்படை வசதியின்றி தினசரி அவதிப்படுகின்றனர். பாமர மக்கள் தங்கள் குறைகள் குறித்து உள்ளாட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க இயலவில்லை. படித்த ஒரு சிலர், அதிகாரிகளை சந்தித்து குறைகளை தீர்த்துக் கொள்கிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண் கவுன்சிலர்கள் 33 சதவீதம் உள்ளனர். இவர்கள் மக்கள் குறைகளை தீர்க்க நேரடியாக வருவது கிடையாது. இவர்களின் கணவர்தான் ‘ஆக்டிங் கவுன்சிலராக’ செயல்படுகிறார். இவர்களில் ஒரு சிலர் மனைவிக்கு பதிலாக அவர்களே மக்களை சந்தித்து குறைகளை தீர்க்கிறார்கள். பலர் சொந்த தொழிலை கவனிப்பதிலேயே மும்முரம் காட்டுகின்றனர்.
இதனால், மக்கள் பிரச்னை தீர்ந்தபாடில்லை. கடந்த 4 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் மாதந்தோறும் நடக்கும் கவுன்சில் கூட்டங்களில், சில கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகள் குறித்து வாய் திறந்து பேசியதில்லை. கூட்டங்களுக்கும் சரிவர வருவது கிடையாது.
பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் தான் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இதனால், அவர்கள் பகுதி குறைகளை கூட்டத்தில் கூற அனுமதி கிடையாது. வெறும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.
இதன் காரணமாக, மக்களின் சிறு குறைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளது. அது நாளடைவில் பெரிய பிரச்னைகளாக உருவாகிறது. மக்கள் போராட்டம், மறியல் நடத்துகின்றனர். இதனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
எனவே, உள்ளாட்சி நிர்வாகம் மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் குறை தீர்க்கும் கூட்டத்தை தலைவர், அதிகாரிகள், கவுன்சிலர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். இதில், அந்த தொகுதி எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்று, பிரச்னைகளை நிவர்த்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம்.
இவ்வாறு கூட்டம் நடத்துவதன் மூலம், பாமர மக்களும் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து குறைகளை கூறும் வாய்ப்பு கிடைக்கும். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.