தினமலர் 29.11.2010
மழையில் தேங்கிய நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
திருச்சி
: திருச்சியில் தொடர்மழையால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை மாநகர மேயர் மற்றும கமிஷனர் பார்வையிட்டு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் திருச்சி மாநகரின் பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தது. மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் பால்சாமி ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்டனர்.கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள கருமண்டபம் பகுதி, கொல்லாங்குளம், சோழன்நகர், விஸ்வாஸ்நகர், அசோக்நகர் தெற்கு, ஆர்.எம்.எஸ்., காலனி ஆகிய இடங்களில் காலிமனைகளில் தேங்கியுள்ள நீரை பார்வையிட்டு, அவற்றை உடனடியாக வெளியேற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். கிராப்பட்டி அன்புநகரில் மழை வடிகால் தடுப்புசுவர் பழுதடைந்துள்ளதை உடனடியாக சரிசெய்யுமாறும் உத்தரவிட்டனர். பின்னர் பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு ம் வெள்ளத்தடுப்பு பணிகளை அம்மையப்பா நகரில் பார்வையிட்டனர். மேயர் சுஜாதா மற்றும் கமிஷனர் பால்சாமியுடன் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜோ சப் ஜெரால்டு, அய்யல்சாமி, தங்கராஜ், ரங்கா, மாநகராட்சி சிட்டி இன்ஜினியர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் சந்திரன், ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கண்ணப்பன், கோட்டத்தலைவர் அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.