தினமலர் 30.12.2010
தேனியில் பட்டாசு வெடிக்க தடை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தேனி: தேனியில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது அபராதம் விதிக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. நகரமைப்பு அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தார். பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தீபாவளி பண்டிகையை தவிர மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது. மீறுவோர் மீது ஒவ்வொரு முறை வெடிப்பதற்கும் 200 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவாதம் வருமாறு: கருப்பு:அண்ணாநகர், சோலைமலை அய்யனார்கோயில் தெருவில் 40 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும் மக்கள் நகராட்சிக்கு வீட்டுவரி, சொத்துவரி, மின்கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தலைவர்: பரிசீலிக்கப்படும். காசிமாயன்: வைகை அணையில் இருந்து தேனி நகருக்கான புதிய குடிநீர் திட்டம் எந்த நிலையில் உள்ளது. தலைவர்: மாவட்ட நிர்வாகம் மூலம் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி: எனது வார்டில் எந்த பணியும் நடப்பதில்லை. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறது. மக்களை திரட்டி போராடுவேன். இவ்வாறு விவாதம் நடந்தது.