தினமணி 28.08.2009
பழனி புதிய பஸ் நிலையம் மாதிரி நிலையமாக அமையும்: அரசு செயலர்
பழனி, ஆக. 27: பழனி புதிய பஸ் நிலையம் மாதிரி பஸ் நிலையமாக அமையும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியச் செயலர் நிரஞ்சன் மார்டி தெரிவித்தார்.
பழனியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தற்போதுள்ள பஸ் நிலையத்தை ஒட்டி பல ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.6 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்தப் பணிகளை அரசு செயலர் நிரஞ்சன் மார்டி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
குடிநீர் வடிகால் வாரியத் தலைமை பொறியாளர் ரகுநாதன், மதுரை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சீனி அஜ்மல்கான், மதுரை மண்டல நகராட்சிப் பொறியாளர் கருணாகரன், பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ஹக்கீம், ஆணையர் காளிமுத்து, பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் ஆய்வின் போது பங்கேற்றனர்.
செயலர் நிரஞ்சன் மார்டி கூறியது:
இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் செப். இறுதியில் திறக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பழனி மட்டுமன்றி பொள்ளாச்சி, ஓசூர், பூந்தமல்லி, கொடைக்கானல் உள்ளிட்ட 6 நகராட்சிப் பகுதிகளில் பஸ் நிலையப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றை விரைவில் முடிக்க துணை முதல்வர் ஆர்வமாக உள்ளார்.
பழனி நகராட்சி பஸ் நிலையம் மாதிரி நிலையமாக அமையும் அளவுக்கு பணிகள் சிறப்பாக உள்ளன. இங்கு 32 பஸ் ரேக்குகள் அமையவுள்ளது எனத் தெரிவித்தார்.