தினமணி 08.12.2010
பராமரிப்புப் பணி: பஸ் வழித்தடத்தை மாற்ற முடிவு
அருப்புக்கோட்டை, டிச. 7: நெடுஞ்சாலைத் துறையின் திருச்சுழி சாலையில் 10-ம் தேதி முதல் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், பஸ் வழித்தடத்தை மாற்ற அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
திருச்சுழி மார்க்கமாக வரும் பஸ்கள் வாழவந்தம்மன் கோயில் வழியாக வெள்ளக்கோட்டையிலிருந்து பந்தல்குடி சாலையை வந்தடைந்து, தெற்கு தெரு வழியாக பழைய, புதிய பஸ் நிலையங்களுக்குச் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி, கமுதி செல்லும் பஸ்கள் எஸ்.பி.கே பள்ளி, கல்லூரி வழியாக புறவழிச் சாலைக்குச் செல்ல வேண்டும்.
ஆத்திபட்டிக்கு வந்து செல்லும் மினி பஸ்கள் வாழவந்தம்மன் கோயில் வழியாக வெள்ளக்கோட்டை வந்து பந்தல்குடி சாலையைச் சென்றடைய வேண்டும். கனரக வாகனங்கள், லாரிகள் புறவழிச் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கபட்டது.
நாடார் சிவன் கோயில் பஸ் நிறுத்ததில், நகராட்சியால் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிழற்குடையின் முன்தான் அனைத்து பஸ்களையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கபட்டது.
கூட்டத்தில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுப்பாராஜ், நகர் மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜானகிராமன், நகர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி, அருப்புக்கோட்டை போக்குவரத்துக் கழக மேலாளர் பாலசுப்பிரமணியன மற்றும் தனியார் பஸ் உரிமையளர்களும் கலந்து கொண்டனர்.