Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு தடைக்கல்! உள்ளாட்சிகளில் முறைகேடு அதிகரிப்பு

Print PDF

தினமலர்              09.12.2010

கோவை நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு தடைக்கல்! உள்ளாட்சிகளில் முறைகேடு அதிகரிப்பு

பேரூராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளின் செயல் அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால் கோவை மாநகராட்சியின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 107 சதுர கி.மீ., பரப்புள்ள கோவை மாநகராட்சியை எல்லை விரிவாக்கம் செய்து, தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கவுண் டம்பாளையம் நகராட்சிகளும், வடவள்ளி, வீரகேரளம், பேரூர், காளப்பட்டி, துடியலூர், சரவணம்பட்டி, வெள்ளலூர் பேரூராட்சிகளும், சின்னியம்பாளையம், விளாங்குறிச்சி ஊராட்சிகளும் கோவையில் இணைகின்றன.

385 சதுர கி.மீ., பரப்புள்ள பெரு நகரமாக கோவை விரைவில் மாறவுள்ளது. கோவை மாநகராட்சியுடன் இந்த உள்ளாட்சி அமைப்புகள் இணைவதால், நகரங்களுக்கு இணையான வளர்ச்சித் திட்டங்கள் அங்கும் செயல் படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கான சூழல் உருவாகும் முன்பே, உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் உச்சக்கட்ட முறைகேடுகளால், கோவை நகரின் எதிர்கால வளர்ச்சி, கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்களும், நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து "லே-அவுட்' முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இது, நகர வளர்ச்சிக்கு தடைக்கல்லாக மாறி வருகிறது. கடந்த 2006ல் அனுமதியற்ற லே-அவுட்களை வரன்முறைப்படுத்த போடப்பட்ட அரசாணையே இந்த முறைகேடுகளுக்கு அடித்தளம்.

அந்த அரசாணையின்படி, அது வெளியிடப்பட்ட 2006 ஜூலை 25க்கு முந்தைய நாள் வரையிலும், விற்பனை செய்யப்பட்ட மனையிடங்கள் மட்டுமே வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான கால அவகாசமும், 2007 டிச.31 உடன் முடிவடைந்தது. இந்த அரசாணையைப் பயன்படுத்தி, தற்போதும் மனையிடங்கள், வரன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கேற்ப, ஆவணங்களையும் அதிகாரிகள் தயார் செய்து வைத்துள்ளனர். கோவை மாநகராட்சியுடன் இணையவுள்ள பேரூராட்சிகளில்தான் இத்தகைய முறைகேடு அதிகளவில் நடப்பதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்குப் பின், சமீபத்தில் விற்பனை செய்த மனையிடம் வரையிலும், பழைய தேதிகளையிட்டு வரன்முறைப்படுத்திக் கொடுக்கின்றனர்.

இது தொடர்பான ஆவணங்களை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அதிகாரிகளோ, நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகளோ ஆய்வு செய்வதேயில்லை. இடத்தின் மதிப்புக்கு ஏற்ப, மனையிடத்தை வரன் முறைப்படுத்த பேரம் பேசுகின்றனர். இம்முறையில் மட்டுமின்றி, நில உபயோக மாற்றம் செய்யாமல், முறையான அங்கீகாரம் பெறாமல், ரோடு, ரிசர்வ் சைட் இடங்களை ஒப்படைக்காமல் முறைகேடாக உருவாக்கப்படும் லே-அவுட்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆதரவளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில்தான் வீரகேரளம், வடவள்ளி உள்ளிட்ட சில பேரூராட்சிகளில் "பங்காளி தகராறு' ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சிகளில் மட்டுமின்றி, குனியமுத்தூர் உள்ளிட்ட மூன்றாம் நிலை நகராட்சிகளும் இத்தகைய செயல் அலுவலர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அங்கும் இவ்விரு தரப்பினரும் கை கோர்த்து களம் இறங்கியுள்ளனர். அங்கீகாரமற்ற லே-அவுட்களை உருவாக்கி வருவதால், கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும்போது, ஏராளமான அங்கீகாரமற்ற லே-அவுட்கள், கோவை நகரில் இருப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அரசுக்கு எவ்வித தொகையும் செலுத்தாமல், ரோடு, ரிசர்வ் சைட்களை ஒப்படைக்காமல், முறையான அணுகுசாலை இல்லாமல் உருவாக்கப்படும் இத்தகைய லே-அவுட்களில் வசிக்கும் மக்கள், எதிர்காலத்தில் போராடப்போவது நிச்சயம். அவற்றைச் சமாளிக்க, பெரும் தொகையை அந்த இடங்களுக்காகச் செலவிட வேண்டிய கட்டாயமும் வரும்.

எனவே, கோவை மாநகராட்சியுடன் இணையவுள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும், சமீபகாலத்தில் உருவாகியுள்ள லே-அவுட் களை ஆய்வு செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்புக் குழுவை நியமித்து, இந்த உள்ளாட்சிகளில் நடந்துள்ள லே-அவுட் முறைகேடுகளைக் கண்டறிந்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறையினரும் விசாரித்தால், பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலத்துக்கு வரும். இவற்றைச் செய்யாமல், காகிதத்தில் அரசாணையைப் பிறப்பிப்பதால் மட்டும், கோவை நகரை பெரு நகரமாக மாற்றி விட முடியாது.