தினகரன் 23.12.2010
சாலை புதுப்பிக்க டெண்டரை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை, டிச.23:
200 சாலைகள் புதுப்பிக்க ரூ. 18 கோடிக்கு விட்ட டெண்டரை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
சென்னையில் உள்ள பாலாஜி ரோடுவேஸ் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் சுமார் 200 சாலைகளை புதுப்பிக்க மாநகராட்சி கடந்த 9ம் தேதி டெண்டர் விட்டது. டெண்டர் தொகை ரூ. 18 கோடி என்பதால், எங்களை போன்ற முதல் வகுப்பு காண்டிராக்டர்கள் கலந்து கொள்ள முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுக்க உள்நோக்கத்துடன் மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. எனவே, இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து, ‘தமிழக அரசின் கொள்கை முடிவை பின்பற்றி, விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநகராட்சி சாலை போட டெண்டர் விட்டுள்ளது. இதில் குறுக்கிட நீதிமன்றம் விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று தீர்ப்பு கூறினார்.