தினகரன் 23.12.2010
மாநகராட்சி 5வது வார்டு இடைதேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஈரோடு, டிச.23:
ஈரோடு மாநகராட்சியில் 5வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் ராஜீ(எ)முத்துசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து இந்த வார்டுக்கு இடைத்தேர்தல் வரும் 10ம்தேதி நடைபெறவுள்ளது. இந்த வார்டில் கடந்த அக்டோபர் 25ம்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி ஆண் வாக்காளர்கள் 1,288 பேரும், பெண் வாக்காளர்கள் 1,219 பேரும் என 2,507 பேர் உள்ளனர். நேற்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்டது. நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் 29ம்தேதி வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. 30ம்தேதி மனு பரிசிலனையும், 3ம்தேதி வேட்புமனு வாபஸ் பெறவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். 10ம்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 12ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நேற்று மனுதாக்கல் தொடங்கிய நிலையில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.