தினமணி 31.08.2009
மீன் விற்பனைக் கூடம் அமைக்க தொண்டி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம்
திருவாடானை, ஆக. 30: திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், மீன் விற்பனைக் கூடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டம் மன்றத் தலைவர் பாலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தியாகராஜன், செயல் அலுவலர் மார்கண்டன் முன்னிலை வகித்தனர்.
இதில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்திலும், திரவக் கழிவு மழை நீர் வடிகால் திட்டம் ரூ. 87 ஆயிரம் மதிப்பிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், தமிழ் மாநில மீன் வளக் கூட்டுறவு இணையம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சோழியக்குடியில் நான்கு மீன் விற்பனைக் கூடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தொண்டியில் மீன் விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.