தினகரன் 27.12.2010
சிக்குன் குன்யா விழிப்புணர்வு கூட்டம்
ஊட்டி, டிச. 27:
ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர் மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார அலுவலர் பானுமதி பேசுகை யில், குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்களின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி குட்டையாக நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக் காலங்களிலோ அல்லது வேறு காரணங்களினால் தண்ணீர் தேங்கி நின்றால், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளிடம் சொல்லி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
அப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகமால் பார்த்துக் கொள்ள வேண்டும். நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரநிதிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாவட்ட மலேரியா ஒழிப்பு அதிகாரி கபாலி பேசுகையில், மலேரியா நோய் உட்பட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் முறைகள் மற்றும் அதனை அழிக்கும் முறைகள் குறித்து விளக்கினார். இதில், சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.