தினகரன் 03.01.2011
மின்பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
குன்னூர், ஜன.3:
குன்னூர் நகராட்சி நிர்வாகம் சுகாதாரத்தை மேம்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியிலுள்ள முக்கிய சுகாதார பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் தற்போது 2463 தெரு விளக்குகள் உள்ளன.
இதனை முறையாக பராமரிக்க மின் கம்பியாளர், மின் கம்பி உதவியாளர் தலா 4 பேர் வீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 மின் கம்பியாளர், 2 மின் கம்பி உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதால் சீரான பணியை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்க மின் விளக்கு பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரப்பகுதியில் ஏற்படும் மின் பழுதுகளை அவ்வப்போது களைந்து பொது மக்களுக்கு உதவிட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நகர் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.