தினமணி 04.01.2011
மாநகராட்சியின் 93-வது வார்டு உறுப்பினராக எஸ். அருண்மொழி போட்டியின்றித் தேர்வு
சென்னை, ஜன. 3: சென்னை மாநகராட்சியின் 93-வது வார்டு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எஸ்.அருண்மொழி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 93-வது வார்டு உறுப்பினர் சேரன் மறைவைத் தொடர்ந்து, உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் எஸ்.அருண்மொழி வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சியின் 93-வது வார்டுக்கான உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையாளருமான தா. கார்த்திகேயன் அறிவித்தார்.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் சி.விஜயராஜ்குமார் முன்னிலையில், எஸ்.அருண்மொழிக்கு வேட்பாளருக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.
மண்டலக்குழுத் தலைவர் எம். தனசேகரன் (எ) காமராஜ், வார்டு உறுப்பினர்கள் ஆர்.துரை, எம்.லலிதா, பா.தீபா ஆகியோர் உடனிருந்தனர்.