தினமலர் 03.01.2011
நாய் பிடிக்க ரூ.25; மாடு பிடிக்க ரூ.150 மாநகராட்சி அழைப்பு
சென்னை : சாலைகளில் திரிந்த 1, 470 மாடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு, 21 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை நகர சாலைகளில் ஆங்காங்கு மாடுகள் திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு சாலைகளில் திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து,சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம், அபராதம் வசூலித்து, எச்சரித்து விடுவிப்பது வழக்கம். இந்தாண்டு, இதுவரை 1,470 மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து 20 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.தெரு நாய்கள் தொல்லையை தடுக்க மாநகராட்சியில், நாய் பிடிக்க, ஆறு வாகனங்கள் உள்ளன. இதில், 15 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்தாண்டு, இதுவரை 22 ஆயிரத்து 210 நாய்கள் பிடிக்கப்பட்டு, இன விருத்தி தடுப்பு அறுவை சிசிச்சை செய்து, பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்பட்டுள்ளது.தற்போது, தெருவில் திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க, பணியாளர்களை நியமனம் செய்ய மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது. சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க 150 ரூபாயும், நாய் பிடிக்க 25 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. இப்பணி செய்ய விருப்பமுள்ளவர்கள் மாநகராட்சியின் சுகாதாரத் துறை, கால்நடை அதிகாரியை அணுக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.