தினமலர் 20.12.2011
மாநகராட்சி வளர்ச்சிப்பணி : திருச்சி மேயர் ஆலோசனை
திருச்சி: திருச்சி மாநகரில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கோட்டத்தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயர் ஜெயா ஆலோசனை நடத்தினார். அப்போது, குடிநீர், குப்பை அகற்றுதல் தெருவிளக்கு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக்மீரா, கோட்டத் தலைவர்கள் லதா, மனோகரன், சீனிவாசன், செயற்பொறியாளர்கள் சந்திரன், அருணாச்சலம், நகர்நல அலுவலர் சேரன், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் ராஜம்மா, பாஸ்கரன், தனபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், புதிதாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் புதிய பணிகள் துவங்கும் முன், சம்மந்தப்பட்ட பகுதியின் கவுன்சிலர், கோட்டத்தலைவரின் ஆலோசனையை கேட்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா அறிவுறுத்தினார். அதேபோல், குடிநீர், குப்பை அகற்றுதல், தெருவிளக்கு சீரமைத்தல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளை மேயர் கேட்டுக் கொண்டார்.