தினமலர் 27.07.2012
நெல்லை மாநகராட்சியில் 711 காலிப்பணியிடங்கள்
திருநெல்வேலி : 711 காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி கேட்டு நகராட்சி நிர்வாக ஆணையருக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிப்பது சம்பந்தமான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் 30ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.
நெல்லை மாநகராட்சியில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 711 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. 4 உதவி ஆணையர் பதவிகள், 2 உதவி வருவாய் அலுவலர், 4 கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 18 பணியிடங்கள், 36 வருவாய் உதவியாளர்கள், 55 துப்புரவு ஆய்வாளர்கள், 16 டிரைவர்கள், 6 உதவிப்பொறியாளர்கள், 6 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 28 செயல் திறன் உதவியாளர்கள், 6 மருத்துவ அலுவலர்கள், 9 சுகாதார ஆய்வாளர்கள், 8 மருந்தாளுனர்கள், 10 சுகாதார பார்வையாளர்கள், 32 பல்நோக்கு சுகாதாரப்பணியாளர்கள், 18 அலுவலக உதவியாளர்கள், 28 வாட்ச்மேன்கள், 368 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 35 பணியிடங்களுக்கு 711 நியமிக்கப்படவேண்டியுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்பக்கேட்டு மாமன்றத்தின் அனுமதியுடன் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு முன்மொழிவுகள் சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்படவுள்ளது.