தினமலர் 31.07.2012
புளியங்குடி நகராட்சி கூட்டம்
புளியங்குடி : புளியங்குடி நகராட்சி கூட்டம் நடந்தது.
புளியங்குடி நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பரமேஸ்வரபாண்டியன், ஆணையாளர் தங்கராஜ், பொறியாளர் கோமதிசங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
பரமசிவன் : எனது வார்டில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு சுமார் 60 நாட்கள் ஆகிறது. முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் : இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்வி : எனது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாறாக அருகில் உள்ள பகுதிகளில் நாள்தோறும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
தலைவர் : இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து வால்வுகள் புதுப்பிக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
பாலசுப்பிரமணியன் : அருணாசலவிநாயகர் கோவில் தெரு மிகவும் மோசமாக நடக்க இயலாத நிலையில் உள்ளது. அதனை உடனே புதுப்பித்து சாலை அமைக்க வேண்டும்.
தலைவர் : சாலையை உடனே பார்வையிட்டு புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அல்மகதி : நகராட்சிக்கு சொந்தமான 3 கிணறுகளை தூர்வாரி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டும்.
தலைவர் : கிணறுகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல காலங்களாக உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது.
மலுங்குவாவா : எனது வார்டில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சுமார் 15 நாட்களுக்கு ஒருமுறை கூட தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நான் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பலர் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.