தினமலர் 02.08.2012
கோவில்பட்டியில் நகராட்சி கூட்டம்
கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சியில் அவசரக்கூட்டம் நடந்தது. இதில் வழக்கம் போல் அடிப்படை வசதிகள் இல்லையென கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி பேசினர்.
கோவில்பட்டி நகராட்சியின் அவசரக்கூட்டம் முன்றைய தினம் நடந்தது. கோ வில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் ஜான்சிராணி சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்
. துணை சேர்மன் ராமர், கமிஷ்னர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வரும் ஆக.23ந்தேதி கோவில்பட்டி இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்கு டெண்டர் விடப்படுவதாக சேர்மன் அறிவித்து கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதையடுத்து கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. இதில் திமுக கவுன்சிலர் கருணாநிதி பேசும்போது, அவசரக்கூட்டம் என திடீரென அறிவிக்க இருக்கும் விதிமுறைகள் என்ன, இக்கூட்டம் குறித்த பொருட் குறிப்புகள் எப்போது எழுதப்படும், கவுன்சிலர்கள் எப்படி தெரிந்து கொள்வது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் நகராட்சி கட்டடம் புதியதாக கட்டப்படுவதாக சென்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது, ஆனால் இருக்கின்ற கட்டடத்தை இடித்து புதுப்பித்து கட்டப்போவதாக தற்போது தெரிய வருகிறது. ஆகவே கூட்டத்தில் அறிவிக்கும் அறிவுப்புகளை தெளிவாக புரியும்படி அறிவிக்க வேண்டுமென பேசினார். திமுக கவுன்சிலர் நாகராஜ் பேசும்போது கோவில்பட்டி பகவத்சிங் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிமெண்ட் ரோடு போடப்பட்டது. தற்போது அதன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்காக சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டம் என்னவானது என்று தெரிய வில்லை என்பதால் பகவத்சிங் தெருவில் ரோடு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். மற்றொரு திமுக கவுன்சிலர் தவமணி பேசும்போது கோவில்பட்டியில் மூன்று குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மலைப்பகுதிக்கு மட்டும் மாதம் மூன்றுமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நகரின் மற்ற இடங்களுக்கு இரண்டு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. எனவே கோவில்பட்டி நகராட்சி முழுவதும் ஒரே மாதிரியான குடிநீர் விநியோக முறையை கொண்டு வர வேண்டும் என்றார். இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென கமிஷ்னர் வரதராஜன் தெரிவித்தார். பாமக கவுன்சிலர் மாரியப்பன் பேசும்போது, வார்டுகளில் தெருவிளக்கு எரியவில்லை, பழுதாகி இருக்கும் விளக்குகளை சரிசெய்ய போதுமான ஊழியர்கள் இல்லையென்பதால், பற்றாக்குறை உள்ள ஊழியர்களை நியமனம் செய்து தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திமுக கவுன்சிலர் ஏஞ்சலா பேசும்போது ஜோதிநகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. இப்பகுதிகளில் தெருவிளக்கு, வாறுகால், ரோடு வசதிகள் ஏதுவும் இல்லை. ஆகவே உடனடியாக அப்பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்.
நகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் அங்கீகாரம் இல்லாத பகுதிகளுக்கு வசதிகள் கிடைப்பதில் ஆய்வு செய்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கமிஷ்னர் கூறியதையடுத்து சிறிதுநேரம் காரசார விவாதம் நடந்தது.
மேலும் வழக்கம் போல் பல கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் காணப்படும் குறைபாடுகள், கிடப்பில் போடப்பட்ட பணிகள் குறித் து முறையிட்டு பேசினர். கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சுகாதார அலுவலர் ராஜசேகரன், பொறியாளர் முத்து, மேலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.