Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மக்களை சேர்க்க மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 04.09.2009

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மக்களை சேர்க்க மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் வேண்டுகோள்

திருநெல்வேலி, செப். 3: தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தகுதி உள்ள அனைவரையும் சேர்ப்பதில் மாமன்ற உறுப்பினர்கள் தீவிரம் காட்ட வேண்டும் என மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேயர் பேசியதாவது: தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 72,000 வரை ஆண்டு வருமானம் உள்ள அனைவரும் சேரலாம்.

இந்த திட்டத்தில் தகுதி உள்ள அனைவரையும் சேர்க்க மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை ஒருவாரம் ஒதுக்கி வைத்து, இந்தப் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

உறுப்பினர் பா.ரா. வெங்கடேசன்: இந்த திட்டத்தில் மக்களை சேர்க்க ஊழியர்கள் பள்ளிக் கூடங்களில் அமர்ந்து விண்ணப்பங்களை நிரப்பி மக்களுக்கு உதவி வருகின்றனர்.

வருமானச் சான்றை பெற கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது.

இதனால் பொதுமக்கள் இங்கும், அங்குமாக அலைந்து சிரமப்படுகின்றனர்.

எனவே, கிராம நிர்வாக அலுவலரை விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பள்ளிகளுக்கே வரவழைத்து வருமானச் சான்றிதழை அளிக்கச் செய்யலாம்.

தீர்மானங்கள்:தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு எஸ். ராமசுப்பு எம்.பி., என். மாலைராஜா எம்.எல்.. ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து லாரிகள் வாங்கித் தரும்படி கேட்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது மேயர் பேசியதாவது: குடிநீர் லாரிகள் வாங்குவதற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி செலவின விதிமுறையில் அனுமதி உள்ளது. ஆனால், எம்.எல்.. நிதியில் அதற்கான விதிமுறை இல்லை என மாலைராஜா பதில் அளித்துள்ளார்.

எனவே, இப்போது எம்.பி. நிதியில் இருந்து ஒரு லாரி வங்கிக் கொள்ளவும், எம்எல்.. நிதியில் இருந்து லாரி கோரும் தீர்மானத்தை கைவிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது என்றார்.

மேலப்பாளையம், தச்சநல்லூர் மண்டலங்களின் குடிநீர் திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மாநகராட்சியின் புதிய ஆணையர் பாஸ்கரனுக்கு வரவேற்பு தெரிவித்து மேயரும், உறுப்பினர்களும் பேசினர்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உடன், கூட்டம் முடிவடைந்ததாக மேயர் அறிவித்தார்.

அப்போது, சுயேட்சை உறுப்பினர் சுப்பிரமணியன் எழுந்து தனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி வெளியேறினார்.