தினமலர் 04.08.2012
தெருவிளக்குகள் பணி விரைவில் துவங்கும்: அதிகாரி தகவல்
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்கு அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது.
அரசு நிர்ணயித்த தொகையை விட 21.05 சதவீதம் குறைவாக, நெல்லை தனியார் நிறுவனத்தினர் டெண்டர் அளித்தனர்.இதை தொடர்ந்து பணி ஆணை வழங்கப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன், மின்சாதன பொருட்களை, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
ஐ. எஸ். ஐ. முத்திரை இல்லாததால், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கூறியதாவது:
அரசு விதிகளுக்கு மாறாக ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத, மின்சாதன பொருட்கள் கீழக்கரை நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டன. தகவலறிந்ததும் ஒப்பந்ததாரரை பொருட்களை திரும்ப எடுத்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளேன்.டெண்டர் ஆணை ரத்து செய்யப்படவில்லை. அரசு விதிகள்படி குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை கொண்டு, ஏற்கனவே வழங்கப்பட்ட நிறுவனத்தினரால் விரைவில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி துவங்கும், என்றார்.