தினமணி 09.08.2012
காரைக்குடியில் நவீன மயானம்: எரிவாயுத் தகனமேடை சோதனை
காரைக்குடி, ஆக. 8: காரைக்குடி சந்தைப்பேட்டைப் பகுதியில் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நவீன மயானத்தின் எரிவாயுத் தகனமேடையில் புதன்கிழமை சடலம் வைத்து எரியூட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடி நகராட்சி 30-வது வார்டு சந்தைப் பேட்டைப் பகுதியில் எரிவாயுத் தகன மேடை அமைக்கும் பணி தொடங்கி, பணி நிறை வுற்று துவக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ, இதனை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகை யில் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அதற்காக முதலில் எரிவாயு தகன மேடை செயல் பாடு குறித்து சடலம் ஒன்று எரியூட்டி சோதனை நடத்தப்பட்டது.
இதில் காரைக்குடி நகர்மன்ற துணைத் தலைவர் சோ. மெய்யப்பன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மாரியப்பன், காரைக்குடி தொழில் வணிகக் கழகச் செயலாளர் சாமி. திராவிடமணி, அரிமா சங்க பிரமுகர் எஸ். கண்ணப்பன், 30-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த எரிவாயுத் தகன மேடை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதையடுத்து தனியார் அறக்கட்டளையினருக்கு ஒப்படைக்கும் ஆலோசனைக் கூட்டம் ஆக. 16-ம் தேதி நடைபெறுகிறது.
அதன்பின் நவீன மயானம் செயல்படும் விதம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.