Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாமக்கல் நகராட்சி வார்டுகளில் சனிக்கிழமைகளில் நேரடி ஆய்வு: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி              12.08.2012

நாமக்கல் நகராட்சி வார்டுகளில் சனிக்கிழமைகளில் நேரடி ஆய்வு: நகர்மன்றத் தலைவர்

நாமக்கல், ஆக.11: மக்களை நோக்கி நகராட்சித் திட்டம் நாமக்கல் நகராட்சியில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் சனிக்கிழமை வார்டுகளில் நேரடி ஆய்வுகள் செய்யப்பட்டு, மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் தெரிவித்தார்.

நகராட்சி பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாக அணுகி உடனுக்குடன் தீர்வு காணும் விதத்தில் நாமக்கல் நகராட்சியில் மக்களை நோக்கி நகராட்சித் திட்டம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா ஏ.எஸ்.பேட்டை சில்ரன்ஸ் பார்க் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் திட்டத்தை தொடக்கிவைத்துப் பேசியது:

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தெரிந்து நிவாரணம் வழங்கும் வகையில் மக்களை நோக்கி நகராட்சி நிர்வாகம் என்ற சீரிய திட்டம் நாமக்கல் நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 16, 19 ஆகிய இரு வார்டுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக நகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதோடு மட்டுமன்றி சொத்து வரி, பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் இணைப்புக்கு பெயர்மாற்றம் செய்தல், புதை சாக்கடைத் திட்ட இணைப்பு வழங்குதல் ஆகிய பணிகள் அந்தந்த இடத்திலேயே ஆய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்படும். இந்த சீரிய திட்டத்தை நகராட்சி மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளுக்கு நிவாரணம் பெற வேண்டும் என்றார்.

தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் கூறியது:

வாரந்தோறும் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்ட வார்டுகளுக்கு நகர்மன்றத் தலைவர், மாமன்ற உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவர். அந்த குறைகள் மீது உடனுக்குடன் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மனுக்கள் பெறுவதோடு மட்டுமன்றி வார்டு முழுவதும் நேரடி ஆய்வுகள் செய்து அந்த வார்டுகளில் நிலவும் குறைபாடுகளை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அலுவலர்கள் தங்கள் வார்டுகளுக்கு வரும் போது பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றார் அவர்.

முன்னதாக, 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் சுழல் நிதியும், 15 பேருக்கு தலா ரூ.2000 ஈமச் சடங்கு மானியமும், 5 பேருக்கு நீண்ட கால நிலுவைத் தொகையாக ரூ.3.17 லட்சத்தையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்தி முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் சேகர், ஆணையர் செழியயன், பொறியாளர் கமலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 13 August 2012 09:40