தினகரன் 13.08.2012
வாலாஜா கூட்டுறவு சங்க பிரம்பு தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் நகராட்சி தலைவர் வழங்கினார்
வாலாஜா, :வாலாஜா கூட்டுறவு பிரம்பு தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை நகராட்சி தலைவர் வழங்கினார்.வாலாஜா பிரம்பு தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றமுன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கச் செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். தனி அலுவலர் வெங்கடேசன், நகராட்சி துணைத்தலைவர் மூர்த்தி, முன்னாள் சங்க துணைத்தலைவர் சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய ஜவுளித்துறை சார்பில் 150 சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, ராஜிவ்காந்தி மருத்துவ காப்பீடு திட்டம், எல்ஐசி சார்பில் வழங்கப்பட்ட விபத்து காப்பீடு திட்டம் ரூ.75 ஆயிரத்தை ஒரு பயனாளிக்கும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான காசோலைகளை 2 பயனாளிகளுக்கும் வாலாஜா நகராட்சி தலைவர் வேதகிரி வழங்கினார்.
இதில் கவுன்சிலர்கள் அபிபுல்லா, சையத் உஸ்மான், டபிள்யூ.ஜி.முரளி, அனந்தராமன், சம்பத் மற்றும் நகர அதிமுக செயலாளர் டபிள்யூ.ஜி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.