தினமணி 16.08.2012
திருச்சி மாநகராட்சியில் சுதந்திர நாள் விழா
திருச்சி, ஆக. 15: இந்திய சுதந்திர நாளையொட்டி புதன்கிழமை காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அ. ஜெயா கொடியேற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகள் 14 பேருக்கு தங்க நாணயம், தையல் பயிற்சி பெற்ற 40 மகளிருக்கு சான்றிதழ்கள் மற்றும் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்கள் 9 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். இந்த விழாவில், கீழரண் சாலை மாநகராட்சிப் பள்ளி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் ம. ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் ஜெ, சீனிவாசன், என். மனோகரன், ஆர். ஞானசேகர், எம். லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.