தினகரன் 16.08.2012
மாநகராட்சி விரிவாக்கப்பகுதிகளில் புதிதாக 4 ஆயிரம் தெருவிளக்குகள் சுதந்திர தின விழாவில் மேயர் அறிவிப்பு
மதுரை, : மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பகுதிகளில் ரூ.19 கோடியில் 4 ஆயிரம் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படும் என மேயர் ராஜன் செல்லப்பா கூறினார்.
மாநகராட்சி வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மேயர் ராஜன் செல்லப்பா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கமிஷனர் நந்தகோபால், துணை கமிஷனர் சாம்பவி, நகரமைப்புப் பொறியாளர் மதுரம், உதவி ஆணையர்கள் தேவதாஸ், ரவீந்திரன், சின்னம்மாள், சுகாதாரத்துறை அலுவலர் பிரியா, மண்டலத் தலைவர்கள் ராஜலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் மேயர் பேசுகையில், ‘‘மாநகராட்சியின் விரிவாக்கப்பகுதியில் 177 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட உள்ளது. மேலும், 25 லாரிகள் மூலம் தினந்தோறும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரமைப்பு கட்டமைப்பு வசதியின் கீழ் ரூ.14 கோடியே 55 லட்சத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும். மண்டலம் 1ல் ரூ.75 லட்சத்தில் தெருவிளக்குகள் தானியங்கி மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடலழகர் பெருமாள் கோயில், சிம்மக்கல், தமிழ்ச்சங்கம் சாலை, மகாத்மா காந்தி நகர் ஆகிய பகுதிகளில் ரூ.16 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. விரிவாக்கப்பகுதிகளில் ரூ.19 கோடியில் 4 ஆயிரம் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படும்,’’ என்றார்.