தினமணி 17.08.2012
சிறந்த பேரூராட்சி திருப்பத்தூர்: ஆட்சியர் பாராட்டு
திருப்பத்தூர், ஆக. 16: சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பத்தூர் பேரூராட்சிக்கு ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கினார்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 12 பேரூராட்சிகளின் நிர்வாகத் திறன் அடிப்படையில் சிறந்த பேரூராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 5 திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை ஒருங்கிணைத்து அதை மட்கும் மட்காத குப்பைகளாக பிரித்து உரம் தயாரித்து விவசாயப்பணிக்கு வழங்க, குடிதண்ணீர் தூய்மை, முழு சுகாதாரம், சாலைகள் முழுமையாக அமைத்து கண்காணித்தல், தெருவிளக்கு மற்றும் சூரிய ஒளியில் எரியும் விளக்குகள் பராமரித்தல் போன்ற திட்டங்களுக்காக இப்பேரூராட்சியை தேர்வுக் குழு பரிந்துரை செய்தது.அரசு உத்தரவுப்படி திருப்பத்தூர் பேரூராட்சிக்கு மாவட்டத் தலைவர் கேடயம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் எம்.பன்னீர் செல்வம், மாநில பிற்பட்டோர் ஆணைய உறுப்பினர் முருகானந்தம், ஊராட்சிக் குழுத் தலைவர் சிவதேவ்குமார், துணைத் தலைவர் சின்னையா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் தெய்வநாயகம் மற்றும் திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.