தினகரன் 17.08.2012
மண்டல அலுவலகங்கள் மூலம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமனம் மாநகராட்சி உத்தரவு
சென்னை, : மண்டல அலுவலகங்கள் மூலம், தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில், தேனாம்பேட்டை(மண்டலம் 9 ), கோடம்பாக்கம்( மண்டலம் 10), அடையாறு(மண்டலம் 13) ஆகிய 3 மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சி சார்பில் சாலைகளில் குப்பை தொட்டிகள் அமைத்தும், 3 சக்கர சைக்கிளில் வீடு-வீடாக சென்றும் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய இடங்களில் குப்பை சேகரிக்கும் வளாகங்கள் அமைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.
பணியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் குப்பை அள்ளும் பணியில் பல வார்டுகளில் தேக்கம் உள்ளது. இப்பிரச்னைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் புதிதாக 2,000 குப்பை தொட்டிகள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் வாங்க மாநகராட்சி ரூ.3 கோடியில் டெண்டர் கோரியுள்ளது. இந்த டெண்டர் வரும் 31ம் தேதி திறக்கப்படுகிறது.
மேலும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க அந்தந்த மண்டலங்களிலேயே தேவையான அளவுக்கு தற்காலிக ஊழியர்களை தேர்ந்தெடுத்து துப்புரவு பணியை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.