தினமலர் 22.08.2012
மரக்காணம் கோவில் குளம் ரூ. 20 லட்சத்தில் சீரமைப்பு
மரக்காணம் : மரக்காணம் திரவுபதியம்மன் கோவில் குளம் 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படுகிறது.மரக்காணம் திரவுபதியம்மன் கோவில் குளத்தை சீரமைத்திட கடந்த ஆட்சியின்போது 14 லட்சம் ரூபாய் நிதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. அதற்கான டெண்டர் விடப்பட்டு, குளத்தின் உள்பகுதியை சுற்றிலும் கான்கிரீட் அமைத்தனர். அடுத்த சில மாதங்களில் கான்கிரீட் உள்வாங்கியதால் பணியை சரியான முறையில் முடிக்கவில்லை.ஆனால் பணிகள் நிறைவடைந்ததாக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. தற்போதுள்ள பேரூராட்சி தலைவர் குளத்தை அழகுபடுத்த அரசுக்கு பரிந்துரை செய்ததின் பேரில் மீண்டும் அரசு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.குளத்தை சுற்றி கான்கிரீட் மற்றும் கருங்கல் பொருத்தும் பணியை பேரூராட்சி தலைவர் சேகர், இளநிலை பொறியாளர் அருண் நேரில் பார்வையிட்டனர். பணிகளை துரிதப்படுத்துமாறு பேரூராட்சி தலைவர் சேகர் அறிவுறுத்தினார்.