தினமலர் 22.08.2012
நகராட்சி அனுமதி இல்லாமல் டிஜிட்டல் போர்டு வைக்கக்கூடாது
தேனி: தேனி நகராட்சி அனுமதி இல்லாமல், டிஜிட்டல் போர்டு வைக்ககூடாது, என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தேனி நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் நடத்தும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களாலும், டிஜிட்டல் போர்டு வைப்பது, மேடை அமைத்து ஒலி பெருக்கி பயன்படுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது.
பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், தேனி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. டி.எஸ்.பி., புஷ்பம் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் கோபி, பாண்டி செல்வம் முன்னிலை வகித்தனர். அனைத்து கட்சிகளின் நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேனியில் கனரா வங்கி அருகே பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டத்திற்கு, பெரியகுளம் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி அருகிலும், அல்லிநகரம் பஸ் ஸ்டாப் அருகிலும்,இடம் ஓதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே டிஜிட்டல் போர்டுகள் வைக்க வேண்டும். கண்டிப்பாக கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.
மீறுவோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் கூட்டங்கள் நடத்த வேண்டும். இதை அனைத்து அரசியல் கட்சிகளும், பின்பற்றுவது, என முடிவு செய்யப்பட்டது.